உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீடு அனுமதிக்கப்படாது

2 mins read
ca5df3f2-4425-42db-937a-15b3d499049e
சீன, ஆஸ்திரேலியக் கொடிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன (ஜூலை 21, 2022).  - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி/பெய்ஜிங்: ஆஸ்திரேலியா, தனது சமூகத்தினரை வெளிநாடுகள் கண்காணிப்பதை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறியிருக்கிறார்.

சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் மீது ஆஸ்திரேலியாவில் உள்ள ‘குவான் யின் சிட்டா’ எனும் பௌத்த குழுவைக் கண்காணித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அமைச்சரின் கருத்து வந்துள்ளது. பெண்ணுக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பரா நீதிமன்றத்தில் பெண்ணின் வழக்கு விசாரிக்கப்பட்டது. சீனப் பாதுகாப்பு அமைப்புக்காக அவர் வேவு பார்த்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பெண்ணின் கணவர், சீனாவின் மாநிலமொன்றில் உள்ள பொதுப் பாதுகாப்பு அமைச்சில் மூத்த அதிகாரியாகப் பணிபுரிவதும் நீதிமன்றத்துக்குத் தெரியவந்தது.

அவருடைய வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதைத் தொடர்ந்து கேன்பராவில் உள்ள சீனத் துணைத் தூதரகத்திற்குப் பெண் சென்றிருந்தார். ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் அந்தத் தகவலைத் தெரிவித்தது.

“ஆஸ்திரேலியர்களைத் துன்புறுத்துவதையோ மிரட்டுவதையோ கண்காணிப்பதையோ ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஆஸ்திரேலியாவின் ஜனநாயகத்தில் வெளிநாட்டுத் தலையீடுககளைத் தடுக்க எங்களிடம் வலுவான கட்டமைப்பு உள்ளது,” என்று திருவாட்டி வோங் ஏபிசி வானொலி நேர்காணலில் குறிப்பிட்டார்.

வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிரான சட்டத்தின்கீழ் ஒருவர் குற்றஞ்சாட்டப்படுவது இது மூன்றாவது முறை. சீன நாட்டவர் ஒருவர் குற்றஞ்சாட்டப்படுவது இது முதன்முறை. அந்தச் சட்டம் 2018ஆம் ஆண்டு அறிமுகம் கண்டது.

சீன வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர், அந்த விவகாரத்தின் விவரங்கள் பற்றி அமைச்சுக்குத் தெரியாது என்றார். இருப்பினும் சீனக் குடிமக்களின் உரிமைகளையும் நலன்களையும் காக்க அதனை அணுக்கமாய்க் கண்காணிக்கப்போவதாகப் பேச்சாளர் சொன்னார்.

“சீனா மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் ஒருபோதும் தலையிட்டதில்லை. சீனாவுக்கும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சீர்குலைக்கும் எந்த முயற்சியையும் அது கடுமையாக எதிர்க்கிறது,” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

நீதிமன்ற உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை.

நிரந்தரவாசியான அந்தப் பெண்ணின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆக அதிகமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும் என்று ஆஸ்திரேலிய மத்தியக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்