மும்பை: மகாராஷ்டிராவில் 1,000க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகளிடம் கைவரிசையைக் காட்டிய தம்பதி அடங்கிய கும்பல் ஒன்றை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
சமீர் நார்வேகர், அவரது மனைவி நேகா, அமித் பலாவ் ஆகிய மூவரும் 2019ம் ஆண்டு புனேவைத் தலைமையிடமாகக் கொண்டு ‘டிரேட் வித் ஜாஸ்’ (Trade with Jazz) என்ற முதலீட்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினர்.
அதில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்திய கும்பல், பங்குச் சந்தை வர்த்தகம், அது சார்ந்த தொழில்கள் ஆகியவை மூலம் முதலீடு செய்வோருக்கு 4 விழுக்காடு வரை லாபம் தருவதாகக் கூறினர்.
அதை நம்பி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 1,500க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள், ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரிகள் உள்பட 11,000க்கும் அதிகமானோர் ‘டிரேட் வித் ஜாஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
அத்தகைய முதலீடுகள் மூலம் மோசடிக் கும்பல் ஏறக்குறைய 500 கோடி ரூபாயை ஈட்டியது. அதையடுத்து நிறுவனத்தைத் திடீரென மூடிய மோசடிக் கும்பல் சம்பவ இடத்திலிருந்தும் தலைமறைவானது.
கும்பலைத் தீவிரமாகத் தேடிய தானே பொருளாதார குற்றப் பிரிவு அதிகாரிகள், குஜராத் மாநிலத்தில் மூவரையும் கடந்த மாதம் 29ஆம் தேதி கைதுசெய்ததாகக் குறிப்பிட்டனர்.
மோசடிக் கும்பலின் வங்கிக் கணக்குகளை முடக்கிய அதிகாரிகள் அவர்கள் நிதி பரிவர்த்தனைகளை ஆராய்ந்துவருகின்றனர்.
வழக்குத் தொடர்பில் இன்னும் பலர் கைதுசெய்யப்படக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

