பாரிஸ்: போதைப்பொருள் கடத்தியதற்காக சீனாவில் 2010ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரெஞ்சுக்காரருக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை (ஏப்ரல் 4) தெரிவித்தது.
சீனாவின் இந்த நடவடிக்கை தனக்கு மிகுந்த கவலை அளித்துள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சான் தாவ் போமி என்ற 62 வயது ஆடவர் லாவோசில் பிறந்தவர்.
மனிதநேய அடிப்படையில் அவரை மன்னித்து விடுவிக்கக் கோரி, பிரெஞ்சு அதிகாரிகள் தீவிரமாக முயன்றுவந்தபோதும், அதனையும் மீறி அவருக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று அமைச்சு ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளது.
இறுதி வாதத்தில் பங்கேற்க தற்காப்பு வழக்கறிஞர் குழுவிற்கு அனுமதி வழங்கப்படாதது சானின் உரிமைகளை மறுக்கும் செயல் என்றும் அது குறிப்பிட்டது.
தென்சீனப் பகுதியான குவாங்சோவில் சானுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
‘எல்லா இடங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும்’ மரண தண்டனைக்கு எதிராக பிரான்ஸ் கொண்டுள்ள நிலைப்பாட்டை அமைச்சு மறுவுறுதிப்படுத்தியது. உலகளவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அது அறைகூவல் விடுத்துள்ளது.

