தோக்கியோ: உக்ரேனில் நடக்கும் தாக்குதல்களை நிறுத்த ரஷ்யாவை நெருக்குமாறு ஜி7 நாடுகள் சீனாவைக் கேட்டுக்கொண்டுள்ளன.
ஐக்கிய நாட்டு நிறுவனப் பொது சபைக் கூட்டத்திற்கு இடையே ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
ஜி7 நாடுகளுக்குத் தலைமைதாங்கும் ஜப்பானின் வெளியுறவு அமைச்சு அந்த அறிக்கையை வெளியிட்டது.
ரஷ்யா உக்ரேனிலிருந்து அதன் துருப்புகளை முழுமையாகவும் எவ்வித நிபந்தனைகளின்றியும் உடனடியாக மீட்டுக்கொள்ள சீனா நெருக்குதல் அளிக்கும் என்று உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
சீனாவின் முன்னணி அரசதந்திரி வாங் யீ, நான்கு நாள் பயணம் மேற்கொண்டு ரஷ்யா சென்றிருக்கும் வேளையில் அறிக்கை வெளிவந்துள்ளது.
அவரது பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையே வலுவான அரசியல் உறவுக்கு உறுதிதெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொள்ளும் சாத்தியமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.