ஹூஸ்டன்: ஜி20 கூட்டமைப்பு நாடுகளுக்கிடையே ‘எனர்ஜி அபண்டன்ஸ்’ என்றழைக்கப்படும் ஏராளமான எரிசக்தி என்ற தலைப்பிலான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா நடத்துகிறது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போரைத் தொடங்கியதையடுத்து உலகளவில் எரிசக்திச் சந்தைகளுக்கு இடையூறுகள் இருந்துவருகின்றன. அப்படியிருந்தும் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.
ஹூஸ்டன் நகரில் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) தொடங்கும் பேச்சுவார்த்தைகள் புதன்கிழமை (செப்டம்பர் 16) வரை நடைபெறும். ஹூஸ்டன், எண்ணெய் வளம் மிகுந்த டெக்சஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது.
உலகின் ஆகப் பெரிய பொருளியல்களின் பிரதிநிதிகள் சந்திப்புகளில் பங்கேற்கின்றனர். சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அவற்றில் அடங்கும். உலகின் ஆகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளான கனடா, சவூதி அரேபியா உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்பாளர்களில் அடங்குவர்.
ரஷ்யா தானும் சில அதிகாரிகளை அனுப்பி வைக்கப்போவதாக சனிக்கிழமை (செப்டம்பர் 12) தெரிவித்திருந்தது.
அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்ததற்கு உக்ரேனின் ஐரோப்பியப் பங்காளி நாடுகள் வருத்தம் தெரிவித்தன. உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்ததால் ரஷ்யாவை விலக்கி வைப்பதற்கு அவை நடவடிக்கை எடுத்துவருவது இதற்குக் காரணம்.
மத்திய கிழக்குப் பூசல் காரணமாக எண்ணெய், பெட்ரோல் விலை பெரிய அளவில் அதிகரித்துவரும் நிலையில் ஹூஸ்டனில் சந்திப்புகள் நடைபெறுகின்றன. குளிர்காலத்தை முன்னிட்டு எரிசக்திக் குறைபாட்டைச் சரிசெய்ய ஐரோப்பா சிரமப்பட்டுவரும் சூழலில் இந்நிலை உருவாகியுள்ளது.

