தோக்கியோ: காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளைச் சூழ்ந்திருக்கும் பதற்றம் குறித்தும் வல்லரசு நாடுகளுக்கிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் இந்த வாரம் தோக்கியோவில் நடக்கும் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இந்தக் கூட்டத்தில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகிய ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஜி7 நாடுகளுக்கிடையே இருக்கும் பல்வேறு கவலைகள், மாறுபட்ட அரசியல், பொருளியல் நிலைமை குறித்து இந்தக் கூட்டத்திற்குப் பிறகு அவர்கள் வெளியிடும் அறிக்கை பிரதிபலிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், “பாலஸ்தீனத்தில் அமைதியை நிலைநாட்ட சீனா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்,” என அந்நாட்டு வெளியுறவு அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்தது.
ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தின் தலைமைப் பொறுப்பை சீனா கடந்த வாரம் ஏற்றது குறிப்பிடத்தக்கது.