திருநெல்வேலி: தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் சமூக ஊடகத்தில் கைத்துப்பாக்கி விற்பனை செய்ய முயன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று தினமலர் ஊடகம் புதன்கிழமை (ஜனவரி 14) செய்தி வெளியிட்டுள்ளது.
மேலப்பாளையம் வட்டாரத்தில் துப்பாக்கி விற்கப்படுவது குறித்து காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனை விசாரிக்க அவர்கள் அதிரடிச் சோதனைகள் மேற்கொண்டனர். அப்போது மேளப்பாளையத்தைச் சேர்ந்த அமீர் என்பவரும் ரத்ன பாலா என்பவரும் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக இருந்த கைத்துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்ஸ்டகிராமில் துப்பாக்கி பற்றி விளம்பரம் செய்துள்ளனர். காவல்துறை நடத்திய விசாரணையில் கைத்துப்பாக்கி வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு விற்பனைக்காக கடத்தி வரப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டது.
சதிச் செயல்கள் அல்லது தீவிரவாத காரணங்களுக்காக அது கடத்தப்பட்டதா என்பது பற்றிய விசாரணை காவல்துறையால் தொடரப்பட்டு வருகிறது.

