ஹண்டா கிருமி தாய்லாந்தின் 14வது அபாயகரமான தொற்று நோயாக அறிவிப்பு

ஹண்டா கிருமி தாய்லாந்தின் 14வது அபாயகரமான தொற்று நோயாக அறிவிப்பு

2 mins read
7bdb2c31-b6cc-4694-8c99-9d2260a9caa0
நோய்த்தொற்று கண்டறியப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் அது குறித்துத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் 12 மணி நேரத்திற்குள் விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்றும் தாய்லாந்தின் தேசிய தொற்றுநோய்க் குழு அறிவுறுத்தியுள்ளது. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தின் தேசிய தொற்றுநோய்க் குழு, ஹண்டா கிருமி நோயை நாட்டின் 14வது அபாயகரமான தொற்று நோயாக அறிவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நோய் பரவுவது அரிது என்றாலும், இது மிகவும் அபாயகரமான நோய் என்றும் அக்குழு கூறியுள்ளது.

நோய்த்தொற்று கண்டறியப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் அது குறித்துத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் 12 மணி நேரத்திற்குள் விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்றும் அக்குழு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவக்கூடிய எந்தவொரு புதிய வகை கிருமியையும் தாய்லாந்து கண்டறியவில்லை என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுச் சுகாதாரத் துறையின் நிரந்தரச் செயலாளர் டாக்டர் சோம்ரெர்க் சுங்சமன், ஹண்டா கிருமி நோயைத் தாய்லாந்தின் 14வது அபாயகரமான தொற்று நோயாகச் சேர்ப்பதற்கு தேசிய தொற்றுநோய்க் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளிக்கிழமையன்று (மே 15) தெரிவித்தார்.

இந்த நோய் கடுமையானதாக இருக்கக்கூடும் என்பதாலும், மூச்சுக் காற்றின் மூலம் பரவக்கூடும் என்பதாலும், மேலும் சில வகைகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இது உலகளவில் கவலைக்குரிய ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த வகைப்பாடு, ஹண்டா கிருமி நுரையீரல் நோய்க்குறி மற்றும் சிறுநீரக நோய்க்குறியுடன் கூடிய ரத்தக்கசிவுக் காய்ச்சல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.

இந்த அறிவிப்பு, நோயின் பெயர் மற்றும் முக்கிய அறிகுறிகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது என்று டாக்டர் சோம்ரெர்க் கூறினார்.

ஹண்டா கிருமி நோய், காய்ச்சல், குளிர் நடுக்கம், தலைவலி, தசை வலி, சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும். இது வயிற்று வலி, குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் சார்ந்த அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

கடுமையான நிலைகளில், நோயாளிகளுக்கு இருமல், மூச்சுத்திணறல், நிமோனியா, நுரையீரலில் நீர் கட்டுதல், அதிர்ச்சி, குறைந்த ரத்த அழுத்தம், உடலின் பல்வேறு பாகங்களில் இருந்து ரத்தக் கசிவு, கடுமையான சிறுநீரக செயலிழப்பு, சுவாசக் கோளாறு போன்றவை ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்படலாம்.

நோய்க் கட்டுப்பாட்டுத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் மான்டியன் கனசவாட்சே, ஹண்டா கிருமி நோயை ஓர் அபாயகரமான தொற்று நோயாக அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கு, அந்த நோயின் தீவிரத்தன்மையும் அதிக இறப்பு விகிதமுமே முக்கியக் காரணம் என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துகிருமித்தொற்றுகாய்ச்சல்