ஹாங்காங்: தென்கிழக்காசிய நாடுகள் வழக்கத்தைவிட சற்று அதிக வெப்பமான கோடைக்காலத்தை எதிர்கொள்ளவிருப்பதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் விளைவாக எரிசக்திக்கான தேவையும் மின்சாரக் கட்டமைப்புகள்மீதான சுமையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் பூசலால் அங்குள்ள வட்டாரத்தின் எரிசக்தி விநியோகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அரை பில்லியனுக்கும் அதிகமானோர் வசிக்கும் தென்கிழக்காசியாவின் பெரும்பாலான நாடுகளில் மார்ச் மாதத்துக்கும் மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று ஆசியான் சிறப்பு வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தொடுத்த தாக்குதல்களால் மத்திய கிழக்கில் போக்குவரத்துச் சேவைகள் நிலைகுத்தின. அதன் விளைவாக எரிசக்தி விலைகள் எகிறியுள்ளன.
அந்த நிலை நீண்டகாலம் நீடித்தால் எரிபொருளால் ஏற்படும் எரிசக்தியை அதிகம் நம்பியிருக்கும் தென்கிழக்காசிய நாடுகளின் மின்சார உற்பத்தி ஏப்ரல், மே மாதங்களில் கடுமையாகப் பாதிக்கப்படும்.
குறிப்பாக, இந்தோனீசியா, மலேசியாவில் வழக்கத்தைவிட 80லிருந்து 100 விழுக்காடுவரை வெப்பநிலை உயர்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வக மையம் சொன்னது.
படிப்படியாக தாய்லாந்தின் சில பகுதிகளும் வியட்னாமின் வடக்குப் பகுதியும் வெப்பத்தில் திண்டாடக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
தென்கிழக்கு வியட்னாம், கம்போடியா, பிலிப்பீன்ஸ் ஆகியவற்றின் சில பகுதிகளில் மட்டும் வெப்பநிலை வழக்கத்தைப் போல இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் கடந்த ஆண்டு 40 விழுக்காட்டு திரவ இயற்கை எரிவாயுவை கத்தாரிடமிருந்து கொள்முதல் செய்தது. இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் அதன் விலை அதிகரிக்ககூடும் என்று எரிசக்திச் சந்தை ஆணையம் குறிப்பிட்டது.
குறைந்த விலையில் உள்ள எரிவாயுவை வாங்கத் தென்கிழக்காசிய நாடுகள் போட்டிபோடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விலை மேலும் அதிகரிக்ககூடும் என்று கூறப்படுகிறது.

