பாரிஸ்: ஐரோப்பாவை வாட்டிவரும் வெப்ப அலை காரணமாக பிரான்சில் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஆளான மூவர் உயிரிழந்தனர்.
அந்நாட்டில் கிட்டத்தட்ட 2,700 பள்ளிகள் மூடப்படும் அல்லது அவை செயல்படும் நேரம் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. திங்கட்கிழமைக்கான (ஜூன் 22) வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது இத்தகவல்கள் வெளியிடப்பட்டன.
ஏற்கெனவே ஐரோப்பாவை வாட்டிவரும் வெப்ப அலை மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. மனிதர்களின் நடவடிக்கைகளால் வரலாறு காணாத அளவில் அனல் காற்று வீசுவதாக ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
தீர்வுகாணும் நடவடிக்கை
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நாடுகள் பிரச்சினையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகின்றன. பள்ளி மூடல் அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும்.
பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய இருநாடுகளிலும் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்சைப் பொறுத்தவரை பொதுவாகத் தலைநகர் பாரிஸ், அதன் சுற்று வட்டாரங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
பெல்ஜியத்தில் வரலாறு காணாத அளவு வெப்பநிலை பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின், பிரிட்டன்
தற்போது நடந்துவரும் உலகக் கிண்ணப் காற்பந்துப் போட்டியில் ஸ்பெயின் சவூதி அரேபியாவுடன் மோதிய ஆட்டம் பொது இடத்தில் திரையிடப்படவிருந்தது.
ஆனால் கடும் வெப்பம் காரணமாக அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
அதேபோல், பிரிட்டனிலும் வரலாறு காணாத அளவில் கடும் வெப்பநிலை பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

