ஹாங்காங்: ஹாங்காங்கின் பிரபலம் ஒருவரது கல்லறையைச் சேதப்படுத்திய சந்தேகத்தில் காவல்துறையினர் 23 வயது ஆடவரையும் 15 வயதுச் சிறுவனையும் கைதுசெய்துள்ளனர்.
‘பியோண்ட்’ பாப் இசைக்குழுவின் பாடகரான வோங் கா-குய்யின் கல்லறையில் கிறுக்கியதுடன் ‘கொக்க கோலா’ பானத்தை அதன்மீது ஊற்றுவதாக அமைந்த காணொளி, இணையத்தில் பரவிவந்ததை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இறந்த பாடகருக்குத் தான் மரியாதை செலுத்தப் போவதாக இளைஞன் கூறிவிட்டு கல்லறையை நோக்கித் தகாத சொற்களைச் சொன்னதுடன் கொக்க கோலாவை ஊற்றியபின் அதை நக்கவும் செய்தார்.
பின்னர், கல்லறையில் இருந்த மலர்க்கொத்திலிருந்து தாள்களையும் மலரிதழ்களையும் கடித்துவிட்டு, சீனத் தொடர்களை எழுதினார் ஆடவர்.
இது போதாது என்று கல்லறையில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தைச் சுத்தியல் கொண்டு அடித்தார் அந்த இளைஞன்.
படுத்துக்கொண்டு தெருவில் உருண்டு செல்லுதல், விரைவு உணவகம் ஒன்றில் பிச்சை எடுத்தல் என அந்த இளைஞன், சமூக கோட்பாட்டுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவதைக் காட்டும் வேறு காணொளிகளும் யூடியூப்பில் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜப்பானில் 1993ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு விளையாட்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புக்குச் சென்றிருந்த வோங், மேடையிலிருந்து கீழே விழுந்துவிட்டார். தலையில் கடுமையான காயங்களுடன் கோமா நிலைக்கு உடனே தள்ளப்பட்டார் அவர். அதே மாதம் அவர் மரணமடைந்தார்.
தொடர்புடைய செய்திகள்

