மத்திய கிழக்குப் பூசலில் புதிய திருப்புமுனையாக, செங்கடலில் சவூதி அரேபியாவின் இரண்டு எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கியதாக வியாழக்கிழமை (ஜூலை 23) ஹூதி போராளிகள் அறிவித்துள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணை முடங்கியுள்ளதால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பதற்றநிலையை மேலும் சிக்கலாக்கும் விதமாக ஹூதி அமைப்பின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
சவூதி அரேபியாவின் கடல்வழிப் போக்குவரத்துக்கு தாங்கள் ஏற்படுத்தியுள்ள தடையின் அங்கமாக இதனை ஹூதி போராளி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏற்படுத்தியுள்ள தடைகளுக்கு வலுசேர்த்து ஆதரவு வழங்கும் வகையில், ஹூதி போராளிகள் தற்போது செங்கடலில் ஆயுதத் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இதனால், அக்கடல் வழியாக எண்ணெய் எடுத்துச் செல்லும் கப்பல்களும் இனி தேங்கி நிற்கும் நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏமன் நாட்டிலிருந்து இயங்கும் ஹூதி அமைப்பினர், அரேபிய வளைகுடாவின் ‘பாப் எல் மாண்டெப்’ நீரிணைப் பகுதியைத் தங்களது கட்டுக்குள் வைத்துள்ளனர். ஹூதி அமைப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மத்திய கிழக்குப் போரில் ஈரானுக்குச் சாதகமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வழிகாட்டுதலின்படி, அமெரிக்க ராணுவம் புதன்கிழமை ஈரான்மீது தொடர்ந்து 12வது நாளாக இரவில் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தது.

