மணிலா: மிகவும் மோசமான சூறாவளிக் காற்று, வறட்சி நிலை ஆகியவை நாட்டை சீரழித்த நிலையில், பிலிப்பீன்ஸ் நாட்டு பொருளியல் 2024ஆம் ஆண்டு இலக்கை எட்டத் தவறிவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதில் 2024ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.6 விழுக்காடு வளர்ச்சியை எட்டியது. இது அதற்கு முந்தைய ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியான 5.5 விழுக்காட்டைவிட சற்றே அதிகம் என்று அந்நாட்டு புள்ளிவிவர ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் 2024ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்காக 6லிருந்து 6.5 விழுக்காட்டு எதிர்பார்ப்பை இது எட்டவில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதைத் தெரிவித்த பிலிப்பீன்ஸ் நாட்டு பொருளியல் வளர்ச்சித் திட்ட அமைப்பின் துணை அமைச்சர் ரோஸ்மேரி எடிலன், அதற்குக் காரணம் சென்ற ஆண்டுத் தொடக்கத்தில் ஏற்பட்ட வறட்சி, பின்னர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒன்றன்பின் ஒன்றாக வந்து நாட்டைச் சீரழித்த ஆறு சூறாவளிக் காற்று என்று விளக்கினார்.
“இதுபோன்ற தீவிர பருவநிலை சுழற்சிகள் ஆண்டு அடிப்படையில் வேளாண், வனப் பகுதி, மீன்பிடித் துறைகளில் பொருளியல் 1.8 விழுக்காடு வீழ்ச்சி கண்டதற்கு காரணம்,” என்று டாக்டர் ரோஸ்மேரி எடிலன் தெரிவித்தார்.
புயல், சூறாவளிக் காற்று என ஒன்றுக்குப் பின் மற்றொன்று வந்த நிலையால் சுற்றுப்பயணத் துறையும் பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.