வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உடன்பாடு எட்டத் தவறினால் ஒரே இரவில் ஈரானை ஒழித்துக்கட்டிவிடப் போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதிய மிரட்டலை விடுத்துள்ளார்.
வளைகுடா வழியாகத் தடையற்ற எரிசக்திப் போக்குவரத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட ஓர் ‘ஏற்றுக்கொள்ளக்கூடிய’ உடன்பாட்டிற்கு அவர் விதித்த காலக்கெடு, வாஷிங்டன் நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) இரவு 8 மணியுடன் முடிவடைகிறது.
இதுகுறித்து திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய திரு டிரம்ப், ஈரானில் உள்ள ‘நியாயமான தலைவர்கள்’ நன்னம்பிக்கையுடன் பேச்சுவார்த்தைக்கு இணங்குவார்கள் என்று தாம் கருதுவதாகவும் ஆயினும் முடிவு என்பது நிச்சயமின்றி உள்ளது என்றும் கூறினார்.
இதற்கிடையே, தற்காலிகச் சண்டை நிறுத்த யோசனையை ஈரான் நிராகரித்துவிட்டது. அதற்குப் பதிலாக, மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஈரான் மீதான பொருளியல் தடைகளை அகற்றவும் அது கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

