சோல்: கிளர்ச்சியில் ஈடுபட்டதாகத் தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில், மூன்றாவது முறையாக விசாரணையைப் புறக்கணித்தார் திரு யூன்.
கடந்த இரண்டு வாரங்களாக அவர் இவ்வாறு செய்து வருகிறார்.
விசாரணை நடைபெறும் இடத்துக்கு திரு யூனை அதிகாரிகள் வரச்சொல்லியும் அவர் அங்கு செல்லவில்லை.
தென்கொரிய நேரப்படி டிசம்பர் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு அவரிடம் விசாரணை நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் விசாரணை நடைபெறுவதாக இருந்த இடத்துக்குத் திரு யூன் செல்லவில்லை. இதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை என்று தென்கொரிய அதிகாரிகள் கூறினர்.
தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை திரு யூன் அமல்படுத்தியதை அடுத்து, டிசம்பர் 14ஆம் தேதி அவரை அதிபர் பதவியிலிருந்து அந்நாட்டு நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்தது.

