பெய்ஜிங்: சீனாவில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுபவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
வேலைவாய்ப்புச் சந்தை மந்தமாக இருப்பதாலும், சொத்துச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதாலும் கடன் வாங்கிய பலர் அதைச் சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
குறைந்த வருமானம் கொண்ட சீனக் குடிமக்கள் மேலும் கடனில் மூழ்குவதால் இந்நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தடுமாறி வரும் தனது பொருளியலை மீட்கச் சீனா பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மக்களைக் கடன் வாங்கிச் செலவு செய்யுமாறு அது தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.
ஆனால், இப்போது கடன் நிலுவைகள் அதிகமாக ஏற்பட்டுள்ளது அந்நாட்டு அரசாங்கத்திற்குப் புதிய தலைவலியைக் கொடுத்துள்ளது.
பயனீட்டாளர்களுக்குக் கடன் வழங்குவதை அதிகரிக்குமாறு வணிக வங்கிகளைச் சீன மக்கள் வங்கி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், வங்கிகளோ வாராக்கடன்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளக் கடன் வழங்கும் விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளன.
அதேபோல் பெரும்பாலும் மோசமான கடன் தகுதி உள்ளவர்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் கடன் வாங்க விரும்புகிறார்கள்.
நல்ல கடன் தகுதி கொண்ட வாடிக்கையாளர்கள் தங்களது கடன் அட்டை பயன்பாட்டைக் குறைத்து வருகின்றனர்.

