வாஷிங்டன்: அமெரிக்காவின் எஃபிஐ (FBI) எனப்படும் மத்திய புலனாய்வுப் பிரிவின் தலைவராக கேஷ் பட்டேல் எனும் இந்திய வம்சாவளி ஆடவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் திரு டோனல்ட் டிரம்ப், தனது விசுவாசி எனக் கூறப்படும் திரு பட்டேலை, எஃப்பிஐ தலைவர் பொறுப்புக்கு நியமித்துள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வீரம், மரியாதை போன்ற குணாதிசயங்களை மீண்டும் எஃப்பிஐக்குக் கொண்டுவர திரு பட்டேல், அமெரிக்காவின் புதிய தலைமைச் சட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பேம் பொண்டிக்குக்கீழ் பணியாற்றுவார் என்று திரு டிரம்ப், ட்ரூத் சோஷியல் (Truth Social) எனும் சமூக ஊடகத்தளத்தில் குறிப்பிட்டார்.
திரு பட்டேல், முன்னதாக திரு பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகப் பொறுப்பு வகித்தபோது சிறிது காலம் அந்நாட்டின் நீதித்துறையில் பணியாற்றினார். பின்னர் அவர், திரு டிரம்ப் அதிபராக இருந்தபோது 2018ஆம் ஆண்டில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்றத்தின் மூத்த இயக்குநராகப் பொறுப்பு வகித்தார்.
திரு டிரம்ப்பின் முதல் ஆட்சி காலத்தின் கடைசி சில மாதங்களில் திரு பட்டேல், அன்றைய தற்காலிகத் தற்காப்பு அமைச்சர் கிறிஸ்டஃபர் மில்லரின் தலைமை நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டார்.
டெக்சாஸ் மாநிலத் தலைமைச் சட்ட அதிகாரி கென் பாக்ஸ்டன் போன்ற சில உயர்மட்ட குடியரசுக் கட்சியினரிடமிருந்து திரு பட்டேல் பொது ஆதரவைப் பெற்றிருந்தாலும், திரு பட்டேலின் நியமனம் செனட் ஜனநாயகக் கட்சியினரிமிருந்தும் சில குடியரசுக் கட்சியினரிடமிருந்தும் பின்னடைவைப் பெற வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.