புதுடெல்லி: மத்திய கிழக்கின் ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதியில் இந்திய வர்த்தகக் கப்பலில் தீ சம்பவம் நடந்ததாக இந்தியத் துறைமுகம், கப்பல், நீர்வழிப்பாதை அமைச்சு திங்கட்கிழமை (ஜூன் 8) செய்தியாளர்களிடம் தெரிவித்தது.
கப்பலில் பயணம் செய்த 24 இந்தியச் சிப்பந்திகளும் காயமின்றி பாதுகாப்பாக உள்ளனர் என்பதையும் அமைச்சு உறுதிப்படுத்தியது. கப்பலில் எவ்வித கொள்கலன்களோ சரக்குகளோ இன்றி அது நீரிணை வட்டாரத்தைவிட்டு வெளியேறிய நேரத்தில் தீ சம்பவம் நடந்தது.
மேற்கு ஆசியாவின் நிலவரம் குறித்து நடந்த அமைச்சுகளுக்கு இடையிலான சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்று அமைச்சின் கப்பல் பிரிவு இயக்குநர் ஒபேஷ் குமார் ஷர்மா விளக்கமளித்தார்.
கப்பலில் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய தற்காப்பு அமைச்சு, ராணுவத்தின் கப்பல் படை, வெளியுறவு அமைச்சு ஆகியவற்றுடன் தொடர்பில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இச்சம்பவம் கப்பலில் நிகழ்ந்துள்ளது.
தீவிர விசாரணை
கப்பலில் தீ பரவியதற்கு, அது தாக்கப்பட்டது காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடந்து வருவதாக திரு ஷர்மா தெரிவித்தார்.
கப்பலில் உள்ள அனைத்து சிப்பந்திகளுடனும் ஓமனில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சு நேரடித் தொடர்பில் உள்ளது.

