ஜகார்த்தா: மின்னிலக்கத் தளங்களில் வயது வரம்பை மீறிய சிறுவர்கள் வைத்திருந்த ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட கணக்குகளை இந்தோனீசிய அரசாங்கம் முடக்கியுள்ளது.
தற்போது அமலாக்கம் செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் பாதுகாப்புக்கான மின்னிலக்க நிர்வாகத்தின் அரசாங்க விதிமுறைகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்பு, மின்னிலக்கத் துறை விவகாரங்களுக்கான அமைச்சர் மியுட்யா ஹாஃபிட் இந்த எண்ணிக்கை மின்னிலக்கத் தளங்களின் ஒத்துழைப்புடன் பதிவு செய்யப்பட்டது என்று தெரிவித்தார். இதன் விவரங்களைத் ‘த ஸ்டார்’ ஊடகம் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) வெளியிட்டது.
“மின்னிலக்கத் தளங்களின் ஒத்துழைப்போடு நாங்கள் ஐந்து மில்லியன் சிறார்களின் கணக்குகளை அகற்றியுள்ளோம். எங்களது இலக்கைவிட உலக அளவில் ஐந்து மில்லியன் பயனாளர்கள் என்பது ஒரு சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும் ஆஸ்திரேலியா அந்நாட்டில் அகற்றிய டிக்டாக் கணக்குகளைவிட இது அதிகமாகும்,” எனவும் அவர் கூறியதாக அன்டாரா ஊடகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
சிறுவர்களைப் பாதுகாக்க வெறும் தடைகளை மட்டும் விதிக்க இந்தோனீசியா விரும்பவில்லை. சிறிது அபாயம் நிறைந்த அணுகுமுறையை இந்தோனீசியா கடைப்பிடிக்கிறது என்று திருவாட்டி மியுட்யா தெரிவித்தார்.
ஏனெனில் ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அனைவரும் அபாயங்கள் நிறைந்ததாக வகைப்படுத்தப்பட்ட மின்னிலக்கத் தளங்களைப் பார்வையிட முழு தடை விதித்துள்ளது.
‘பிபி துனாஸ்’ என்ற உள்ளூர் பெயரில் உள்ள அரசாங்க விதிமுறையின்படி, தொழில்நுட்ப நிறுவனங்கள் அவர்களது சேவைகளை மறுவடிவமைக்க வழிவகைகள் வழங்கப்படுகிறது. அதன்வழியாகச் சிறுவர்களை இன்னும் சிறந்த முறையில் பாதுகாக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
உதாரணமாக ரோபுளோக்ஸ் எனப்படும் இணைய விளையாட்டுத் தளம் 16 வயதுக்கும் குறைந்த இந்தோனீசியப் பயனாளர்கள் பெற்றோரின் அனுமதியின்றி செயல்படுத்த முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
“எனவே தடைகளை மட்டும் உருவாக்காமல் விரிவான செயல்பாட்டை ஊக்குவித்து, சிறுவர்கள் மட்டுமின்றி மின்னிலக்கத் தளங்களும் அவற்றின் நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அமைச்சர் மியுட்யா தெரிவித்தார்.
நடைமுறைச் சவால்கள்
இருப்பினும் அதனைச் செயல்படுத்துவதில் உள்ள சாவல்களை அவர் ஏற்றுக்கொண்டார்.
ஒரு பயனாளரின் உத்தேச வயதைத் தீர்மானித்தல், முக அடையாளத்தைக் கண்டறிதல், குணாதிசயங்களை உணர்தல் போன்ற ஆய்வுகளை மேம்பட்ட வகையில் நிகழ்நேரத்தில் மின்னிலக்கத் தளங்கள் மேற்கொள்வதில் பல நிறுவனங்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றன.


