ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுலவேசி தீவிலுள்ள நிக்கல் உருக்காலையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 13 பேர் மாண்டுவிட்டனர்; மேலும் 38 பேர் காயமுற்றனர்.
அதிகாலை 5.30 மணியளவில் உலைக்களத்தை ஊழியர்கள் பழுதுபார்த்துக்கொண்டு இருந்தபோது வெடிப்பு நிகழ்ந்தது.
இறந்தவர்களில் எட்டுப் பேர் இந்தோனீசியர், ஐவர் சீன நாட்டவர்.
வெடிப்பால் பரவிய தீ காலை 9.10 மணியளவில் அணைக்கப்பட்டதாக இந்தோனீசிய மொரொவாலி தொழிற்பூங்கா வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
“உலைக்களத்தின் அடியில் வெடிப்பைத் தூண்டும் திரவம் சிறிதளவு இருந்ததால் வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணை முடிவுகள் கூறுகின்றன,” என்று அத்தொழிற்பூங்காவின் பேச்சாளர் கூறினார்.
பற்றவைப்பு (வெல்டிங்) வேலைகளுக்காக அங்கு உயிர்வாயு உருளைகள் பல இருந்ததால், முதல் வெடிப்பு ஏற்பட்டதும் அடுத்தடுத்து பல வெடிப்புகள் நிகழ்ந்தன என்றும் அவர் சொன்னார்.
வெடிப்பு நிகழ்ந்த உருக்காலை இந்தோனீசிய சிங்ஷான் எஃகு நிறுவனத்திற்குச் சொந்தமானது.