ஜகார்த்தா: சக்கரை, உப்பு, கொழுப்புச்சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கும் உணவு வகைகளை ஊட்டச்சத்துத் தரநிலைகளைக் கொண்டு வகைப்படுத்துமாறு இந்தோனீசியா, உணவு, பான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஈராண்டுகளுக்குள் ஊட்டச்சத்து வாரியாக உணவை வகைப்படுத்தும் நிறக் குறிப்புகளை அந்தந்த உணவுப் பொருள்கள் உள்ள கலன்கள் அல்லது பொட்டலங்களில் வெளிப்படுத்தவேண்டும்.
இத்தகவல், இந்தோனீசியாவின் சுகாதார அமைச்சின் உத்தரவில் இடம்பெற்றுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அந்த உத்தரவைப் பார்த்திருக்கிறது.
இந்தோனீசியாவில் உணவு வகைகளுக்கு ஊட்டச்சத்துக் குறிப்புகளை வெளிப்படுத்தும் திட்டம் குறித்து முதலில் ராய்ட்டர்ஸ்தான் சென்ற ஆண்டு செய்தி வெளியிட்டது.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) வெளியான சுகாதார அமைச்சு உத்தரவு ஆவணத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களின்படி, அதிக சக்கரை, உப்பு அல்லது கொழுப்புச்சத்து உள்ள உணவு வகைகளுக்கு சிவப்பு நிறக் குறிப்பும் அவை குறைவான அளவு உள்ள உணவு வகைகளுக்கு பச்சை நிறக் குறிப்பும் விதிக்கப்படும்.
ஈராண்டுகளுக்குள் இந்த விதிமுறையைப் பின்பற்றுவது கட்டாயம். எனினும், விதிமுறையைப் பின்பற்றாத நிறுவனங்கள் எதிர்கொள்ளக்கூடிய தண்டனைகள் குறித்து ஆவணத்தில் தகவல் இல்லை.
இதுபோன்ற ஊட்டச்சத்து தரநிலை முறைகளை 40க்கும் அதிகமான நாடுகள் பின்பற்றுகின்றன. சிங்கப்பூரும் அவற்றில் ஒன்று.

