ஜகார்த்தா: காஸா அமைதித் திட்டத்திற்கு உதவ 8,000 வீரர்கள் வரை அனுப்ப இந்தோனீசிய ராணுவம் தயாராகி வருகிறது.
உலகின் ஆகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனீசியாவின் அதிபர் பிரபோவோ சுபியாந்தோ அனைத்துலகப் பாதுகாப்பில் மிகப்பெரிய அளவில் பங்காற்ற விரும்புகிறார்.
பிப்ரவரி 9ஆம் தேதி பிற்பகுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்தத் திட்டம் தற்காலிகமாகவே உள்ளது என்றும் துருப்புகளின் எண்ணிக்கை மற்றும் படைகளை அனுப்பும் நேரம் ராணுவ ஒருங்கிணைப்பைப் பொறுத்தது என்றும் ராணுவத் தளபதி மருளி சிமன்ஜுன்டக் கூறியுள்ளார்.
பொறியியல், மருத்துவ பிரிவுகளில் பணியாற்ற வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு பிரபோவோ, உலகளாவிய அமைதிக்கும் மோதலுக்குப் பிந்திய நிலைப்படுத்தும் முயற்சிகளுக்கும் நாட்டின் பங்கை உயர்த்த முயல்வதால், இந்தோனீசியா அண்மைய மாதங்களாக காஸா குறித்து அக்கறைகாட்டி வருகிறது.
2025 செப்டம்பரில் ஐநா பொதுச் சபையில் பேசிய திரு பிரபோவோ, காஸாவிலும் இதர இடங்களிலும் அமைதியைக் கட்டிக்காக்க 20,000 அல்லது அதற்கும் மேற்பட்ட வீரர்களை அனுப்ப தயார் எனக் கூறியிருந்தார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், எகிப்திய அதிபர் அப்டெல்-ஃபத்தா அல்-சிசி தலைமையில் எகிப்தில் காஸாவின் எதிர்காலம் குறித்த உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட 12க்கும் மேற்பட்ட தலைவர்களில் திரு பிரபோவோவும் ஒருவர்.
அதிபர் டிரம்ப்பின் அமைதிக்கான குழுவிலும் இந்தோனீசியா அண்மையில் இணைந்தது.

