பெய்ஜிங்: சீனா முக்கிய நண்பர், பங்காளி என்று இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 20ஆம் தேதி பதவியேற்ற பிறகு முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு சீனா சென்ற திரு பிரபோவோ, நவம்பர் 9ஆம் தேதி பெய்ஜிங்கில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார்.
திரு பிரபோவோவின் முதல் பயணம் சீனாவாக இருப்பது ஆச்சரியமல்ல என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
சீனாவுடனான உறவை வலுப்படுத்தும் தெளிவான அறிகுறியாக திரு பிரபோவோவின் பயணம் பார்க்கப்படுகிறது.
இந்தோனீசியாவின் ஆகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் அதன் முக்கிய வெளிநாட்டு முதலீட்டாளாராகவும் சீனா இருந்து வருகிறது.
வெளியுறவுக் கொள்கைக்கான இந்தோனீசியாவின் அணுகுமுறை நீண்ட காலமாக அதன் தன்னாட்சியைக் கட்டிக் காப்பதும் அதிகாரப் போட்டிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதும் ஆகும்.
மேலும் இந்தப் பயணம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இந்தோனீ சியாவின் சமநிலையமான உறவை கோடிகாட்டுகிறது.
சீனாவிலிருந்து அதிபர் பிரபோவோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்கிறார். அங்கு புதிய அதிபராக பொறுப்பு ஏற்கவிருக்கும் டோனல்ட் டிரம்பையும் அவர் சந்திக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.