துபாய்: பாகிஸ்தானில் ‘பயங்கரவாத முகாம்’களைக் குறிவைத்து இந்தியா தாக்கியதற்கு அடுத்த நாளான வியாழக்கிழமை (மே 8) இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்குச் சென்ற ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி, இந்தியாவும் பாகிஸ்தானும் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
“வட்டாரத்தில் பதற்றம் அதிகரிப்பதை இந்தியாவும் பாகிஸ்தானும் தவிர்க்கும் என நாங்கள் நம்புகிறோம்,” என்று சொன்ன அவர், பாகிஸ்தானுக்கு திங்கட்கிழமை சென்றபோது விடுத்திருந்த அறைகூவலை நினைவூட்டினார்.
இந்தியா-ஈரான் இடையே கூட்டுப் பொருளியல் செயல்பாட்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திரு அராக்சி இந்தியா சென்றுள்ளார்.
“நமது வட்டாரத்திற்கு அமைதி தேவை. குறிப்பாக, வட்டார நாடுகளுக்கு இடையே பொருளியல் ஒத்துழைப்பை விரிவுபடுத்த அமைதி வேண்டும். அது நடக்கும் என நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.