டெஹ்ரான்: அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் தாக்குதல்களில் 134 மருத்துவ நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக ஈரானிய சுகாதார, மருத்துவ சிகிச்சை, கல்வி அமைச்சு திங்கட்கிழமை (மார்ச் 16) தெரிவித்தது.
இதன் விவரங்கள் குறித்து அந்நாட்டு மெஹ்ர் செய்தி அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதிகச் சேதமடைந்தவற்றில் முழுமையான சுகாதாரச் சேவை வழங்கும் 56 நிலையங்களும் அடங்கும்.
இதர 25 சுகாதார நிலையங்கள், நகரங்களில் அமைந்துள்ள 18 நிலையங்கள், இல்லங்களில் இயங்கும் 18 அமைப்புகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கூடுதலாக 29 நிலையங்களுடன், சுகாதார அலுவலகமொன்று, 24 மணிநேரமும் செயல்படும் மூன்று மருத்துவ அமைப்புகள், மூன்று பேரிடர் நிர்வாக நிலையங்கள் ஆகியனவும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஈரானில் இயங்கிய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் கெர்மன்ஷா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும் பெருஞ்சேதமடைந்துள்ளது. அதில் மட்டும் 42 தனிப்பட்ட மருத்துவப் பிரிவுகள் பாதிப்படைந்துள்ளன.
மேலும் இஸ்ஃபஹான், ஹமிடான், சபஹார் உட்பட பல மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகங்களும் அவற்றின் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளும் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பிட்ட மருத்துவ நிலைங்களில் பணியாற்றிய பலர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில் ஷிராஸ் பகுதியில் இருந்த ஒருவரும் லோரெஸ்தான் பகுதியில் இருவரும் மரணமடைந்துள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

