பாக்தாத்: மத்திய கிழக்கில் போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் தாம் அளித்துள்ள வாக்குறுதிகளை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் நிறைவேற்றுவார் என ஈராக் பிரதமர் முகம்மது ஷியா அல் சுடானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டிரம்ப்புடன் அவர் மேற்கொண்ட தொலைப்பேசி அழைப்பில், மத்திய கிழக்கில் போர்களை நிறுத்துவதில் டிரம்ப்பின் வாக்குறுதிகளையும் அவரின் பிரசார அறிக்கைகளையும் ஈராக் பிரதமர் கோடிட்டுக் காட்டினார்.
திரு சுடானியின் அலுவலகம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) இரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில் இதைத் தெரிவித்தது.
“இந்த இலக்கை எட்டுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் இருதரப்பும் இணக்கம் கண்டன,” என அது கூறியது.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை எதிர்கொள்ள அமைக்கப்பட்ட அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் ஓர் அங்கமாக, ஈராக்கில் ஏறத்தாழ 2,500 அமெரிக்கப் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
காஸாவிலும் லெபனானிலும் நடந்துவரும் போருக்கு மத்தியில், ஈராக்கும் அதில் சேராமல் இருப்பதை உறுதிசெய்ய திரு சுடானி கவனமாக இருந்து வருகிறார்.