கேன்பரா: கிட்டத்தட்ட 14,000 செம்மறி ஆடுகளையும் 2,000 கால்நடைகளையும் ஏற்றிச்சென்ற கப்பல் ஒன்று ஆஸ்திரேலியக் கடற்பகுதியில் சிக்கிக்கொண்டது.
செங்கடலில் மேற்கொண்டிருந்த பயணத்தை அது ரத்துசெய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, விலங்குகளின் நலன் குறித்து மக்கள் அக்கறை எழுப்பியுள்ளனர்.
அந்தக் கப்பல் ஆஸ்திரேலியாவிலிருந்து ஜனவரி ஐந்தாம் தேதி இஸ்ரேலுக்குப் புறப்பட்டது. இருப்பினும், ஏமனின் ஹூதி போராளிகள் விடுத்த தாக்குதல் மிரட்டல் காரணமாக ஜனவரி நடுப்பகுதியில் கப்பல் தனது திசையைத் திருப்பியது. அதன் பிறகு ஆஸ்திரேலிய அரசாங்கம் நாடு திரும்புமாறு அதற்கு உத்தரவிட்டது.
தற்போது சிக்கியிருக்கும் விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு ஆஸ்திரேலியாவில் விடுவிக்கப்படலாம் அல்லது செங்கடலைத் தவிர்க்க, ஆப்பிரிக்காவைச் சுற்றி இஸ்ரேலுக்கு ஒரு மாத காலப் பயணத்தை மேற்கொள்ள மீண்டும் கடலுக்கு அனுப்பிவைக்கப்படலாம் என்று தொழில்துறை அதிகாரிகளும் அரசாங்கமும் கூறின.