காஸா/ஜெருசலேம்: ஹமாஸ் போராளி அமைப்புடன் செய்த சண்டை நிறுத்தம் உடன்பாட்டின் கீழ் சனிக்கிழமை அன்று மேலும் 42 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக 14 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.
மூன்று பாலஸ்தீன கைதிகளுக்கு ஒரு பிணைக்கைதி என்ற ஒப்பந்தத்தின் கீழ் இது இடம்பெற்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சண்டை நிறுத்தம் தொடங்கிய முதல் நாளில் ஹமாஸ் போராளி அமைப்பு 24 பிணைக்கைதிகளையும் இஸ்ரேல் 39 பேரையும் விடுவித்தன.
ஹமாஸ் விடுவித்த 24 பேரில் 13 பேர் இஸ்ரேலியர், 10 பேர் தாய்லாந்து நாட்டினர், ஒருவர் பிலிப்பீன்சைச் சேர்ந்தவர்.
இஸ்ரேல் விடுவித்த 39 பேரில் சிறையிலடைக்கப்பட்ட 24 பெண்களும் பதின்ம வயதினர் 15 பேரும் அடங்குவர்.
இஸ்ரேலும் ஹமாசும் நவம்பர் 24ஆம் தேதிமுதல் நான்கு நாள்களுக்குச் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. கத்தாரில் எட்டப்பட்ட அந்த உடன்பாட்டின்படி, இந்த நான்கு நாள்களில் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 50 பேரும் பாலஸ்தீனப் பிணைக்கைதிகள் 150 பேரும் விடுவிக்கப்பட வேண்டும்.
இந்நிலையில், சண்டை நிறுத்தத்தின் இரண்டாம் நாளான சனிக்கிழமை இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 14 பேரும் பாலஸ்தீனப் பிணைக்கைதிகள் 42 பேரும் விடுவிக்கப்படுவர் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, தங்கள் அன்பிற்குரியவர்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து, பல குடும்பங்கள் நிம்மதி தெரிவித்தன. அதே நேரத்தில், எஞ்சியிருப்போரின் நிலை குறித்து அஞ்சுவதாகவும் அவை தெரிவித்தன.
“தங்கள் அன்பிற்குரியவர்களைக் கட்டியணைக்கக் காத்திருக்கும் குடும்பங்களை எண்ணி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்,” என்றார் திருவாட்டி ஷெல்லி ஷெம் டோவ்.
அவருடைய 21 வயது மகன் ஒமர் ஷெம் டோவ், ஹமாஸ் அமைப்பால் பிணை பிடிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 24ஆம் தேதி விடுவிக்கப்பட்டோரில் அவர் இடம்பெறவில்லை.
“நான் பொறாமைப்படுகிறேன். அதே நேரத்தில், ஒமர் வீடு திரும்பாததால் மிகுந்த கவலையிலும் இருக்கிறேன்,” என்றார் திருவாட்டி ஷெல்லி.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி சண்டை தொடங்கியதிலிருந்து ஹமாஸ் இயக்கம் தன் மக்கள் 1,200 பேரைக் கொன்றுவிட்டதாகவும் கிட்டத்தட்ட 240 பேரைப் பிணை பிடித்துச் சென்றுவிட்டதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது.
அதற்குப் பதிலடியாக காஸாமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏறக்குறைய 14,000 பேர் கொல்லப்பட்டுவிட்டனர் என்றும் அவர்களில் 40 விழுக்காட்டினர் குழந்தைகள் என்றும் பாலஸ்தீனச் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே, சண்டை நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க உண்மையிலேயே வாய்ப்புள்ளது என்றும் காஸாவிற்கு மனிதநேய உதவிப்பொருள்களை அனுப்ப இந்த நான்கு நாள் சண்டை நிறுத்தம் முக்கியமான வாய்ப்பு என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
ஆயினும், சண்டை நிறுத்த காலம் முடிந்ததும் மீண்டும் சண்டை தொடங்கும் என்றும் இஸ்ரேல், காஸா என இருதரப்புமே கூறி வருகின்றன.