காஸா வட்டாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் உதவிப் பொருள்களை வான்வழியாகப் போட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனப் பகுதியில் பசிக் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையிலும் அனைத்துலக நெருக்கடிகளுக்கு இடையிலும் இஸ்ரேலின் நடவடிக்கை வந்துள்ளது.
மாவு, சர்க்கரை, குவளைகளில் அடைக்கப்பட்ட உணவு உட்பட பல்வேறு பொருள்கள் அடங்கிய பொட்டலங்கள் போடப்பட்டதாக இஸ்ரேலியத் தற்காப்புப் படை அறிக்கையொன்றில் தெரிவித்தது. காஸாவிற்குள் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் வாகனங்களை அனுமதிக்கத் தயாராய் இருப்பதாகவும் இஸ்ரேல் இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தது.
அனைத்துலக அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலியத் தற்காப்புப் படை கூறியது.
வான்வழியாக உதவிப் பொருள்கள் போடப்படுவதைக் காட்டும் காணொளியொன்றையும் ராணுவம் சமூக ஊடகத்தில் பதிவிட்டது.
காஸாவின் வட பகுதியில் உதவிப் பொருள்கள் போடப்படுவதைப் பாலஸ்தீனத் தரப்புகளும் உறுதிசெய்தன.