இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் இயக்கம் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் மேற்கொண்டது.
இது இஸ்ரேல் எதிர்பார்க்காத ஒன்று. இதன் தொடர்பில் காஸா போர் நடக்கக் காரணமான தவறுகளைப் சுட்டிக்காட்டி இஸ்ரேலிய ராணுவம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கை இஸ்ரேலிய ராணுவப் படைகள் பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக கூறுகிறது.
இஸ்ரேலிய ராணுவத்தின் அறிக்கை 19 பக்கங்களைக் கொண்டுள்ளது. ஹமாஸ் மற்ற பாலஸ்தீன இயக்கங்களுடன் இணைந்து சுமார் 5,000 பேர் நடத்திய தாக்குதலில் கிட்டத்தட்ட 1,200 பேர் உயிரிழந்ததுடன், 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிபட்டனர்.
அறிக்கையில் எவருக்கும் இதுவரை தெரியாத உண்மைகள் இல்லை என்றாலும், ஹமாஸ் இயக்கத்தின் எண்ணம், அதன் ஆற்றலை இஸ்ரேல் குறைத்து எடைபோட்டது போன்ற ராணுவம் செய்த தவறுகளை பட்டவர்த்தனமாக எழுத்து வடிவில் தெள்ளத் தெளிவாகக் கூறியிருப்பது சிந்தைக்குரியது என்று கூறப்படுகிறது.
ஈரான் மீதும் ஹிஸ்புல்லா இயக்கம் மீதும் இஸ்ரேலிய ராணுவம் அதீத கவனம் செலுத்தி ஹமாஸிடமிருந்து வரக்கூடிய ஆபத்து குறித்து அசட்டையாக இருந்துவிட்டதாக அறிக்கை விளக்கியது. ஹமாஸ் பற்றிய இஸ்ரேலின் கொள்கை ஏறுக்கு மாறாக இருந்ததாக அறிக்கை கூறுகிறது. ஒருபுறம் ஹமாஸ் இயக்கத்தை சட்டவிரோத இயக்கம் என்று கூறும் இஸ்ரேல் அதற்கு மாற்றாக ஒரு அமைப்பை உருவாக்கத் தவறிவிட்டதை அறிக்கை கோடிகாட்டுகிறது.
ஹமாஸ் இயக்கத்தை ராணுவ ரீதியாக சமாளிப்பதே இஸ்ரேலின் போக்காக இருந்துள்ளது என்று கூறும் அறிக்கை, அதற்கு போரின் மீது ஆர்வம் இல்லை என்றும் அதற்கான ஆயத்தத்தில் அது ஈடுபடவில்லை என்றும் இஸ்ரேலிய ராணுவம் நம்பியதாக அறிக்கை கூறுகிறது. இதில் ஹமாஸ் விரித்த பொய்யான வலையில் அது வீழ்ந்துவிட்டதாக அறிக்கை சுட்டியது.
ஹமாஸை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல நாடுகளும் அறிவித்திருந்தன. இருப்பினும் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து அது பெரும் திட்டம் ஒன்றை வகுத்து செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில் அதை நம்பக்கூடியது அல்ல என்றும் சாத்தியப்படாது என்றும் இஸ்ரேலிய ராணுவம் நம்பியதாக அறிக்கை தெரிவிக்கிறது.