தோக்கியோ: ஜப்பானில் கடந்த 15 ஆண்டுகளில் பல சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் சேதத்தை விளைவித்துள்ளன.
கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் வடகிழக்கு ஜப்பானை உலுக்கிய 9 ரிக்டர் நிலநடுக்கம், சுனாமி அலைகளை உருவாக்கியது. இதில் 18,000க்கும் அதிகமானோர் மாண்டனர். ஃபுகுஷிமா அணுமின் நிலையமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குமமோட்டோ பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
அதன்பின், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஹொக்கைடோ தீவில் நேர்ந்த நிலநடுக்கம் நிலச்சரிவை ஏற்படுத்தி 44 பேரின் உயிரைப் பறித்தது. 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஃபுகுஷிமா கரையோரத்தில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின.
தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று நோட்டோ தீபகற்பத்தில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் நிலநடுக்கத்தில் 240க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. எரிமலைகள் அதிகம் உள்ள ஜப்பான், உலகின் ஆக தீவிரமான நிலநடுக்கப் பகுதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

