ஜோகூர் பாரு - உட்லண்ட்ஸ் விரைவு ரயில் சேவை (ஆர்டிஎஸ்) தொடங்கியதும் ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தெப்ராவ் ரயில் சேவை 2027ல் முடிவுக்கு வரும்.
“ஆர்டிஎஸ் சேவை 2027 ஜனவரி 1ஆம் தேதி செயல்படத் தொடங்கி, ஆறு மாதங்களுக்குள் தெப்ராவ் சேவை நிறுத்தப்படும்,” என்று ஜோகூரின் பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு குழுவின் தலைவர் மொஹமட் ஃபஸ்லி கூறியதாக ஹரியான் மெட்ரோ செவ்வாய்க்கிழமை (ஜூன் 24 )செய்தி வெளியிட்டுள்ளது.
கெரெட்டாபி தானா மெலாயு பெர்ஹாட் நிறுவனத்தால் இயக்கப்படும் தெப்ராவ் சேவை 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சேவையைத் தொடங்கியது.
சிங்கப்பூர் நோக்கிய ஐந்து நிமிட பயணத்திற்கான பயணச்சீட்டின் விலை 4 ரிங்கிட்.(1.50 சிங்கப்பூர் வெள்ளி), மலேசியா செல்ல $5.00 ஆகும்.
“1.1 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தச் சேவை, ஒரு நாளில் இரு திசைகளிலும் 31 பயணங்களை மேற்கொண்டு, 8,635 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது” என்று திரு ஃபஸ்லி கூறியுள்ளார்.
உட்லண்ட்ஸ் நார்த்தையும் ஜோகூரின் புக்கிட் சாகரையும் ஐந்து நிமிடங்களில் இணைக்கும் புதிய 4 கிலோ மீட்டர் ஆர்டிஎஸ் இணைப்பின் பணிகள், 2026 டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அது செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்டிஎஸ் சேவைக்கான கட்டணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆர்டிஎஸ், சிங்கப்பூரின் எஸ்எம்ஆர்டி, மலேசியப் பொதுப் போக்குவரத்து நிறுவனமான பிரசரானா ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டுத் திட்டமாகும்.
தொடர்புடைய செய்திகள்
ஆர்டிஎஸ் சேவை வழி ஒவ்வொரு திசையிலும் மணிக்கு 10,000 பேர் வரை பயணம் செல்ல முடியும்.