அரசு ஊழியர்களை பதவி நீக்கும் டிரம்ப் உத்தரவை நீதிபதி ரத்து செய்தார்

1 mins read
e8d604f5-2a77-4884-aff8-be3fdce0dfde
அமெரிக்க கூட்டரசு அமைப்புகளின் மனிதவளத் துறை பணி நீக்கம் செய்ய வேண்டிய தற்காலிக ஊழியர் பட்டியலை தயாரிக்க விடுத்த கோரிக்கையை ரத்து செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்

சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்க தற்காப்பு அமைச்சு, மற்ற அரசு அமைப்புகள் ஒட்டுமொத்தமாக பல அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அதிபர் டிரம்ப் விடுத்த உத்தரவிற்கு கலிஃபோர்னியா மாநில கூட்டரசு நீதிபதி ஒருவர் தற்காலிகத் தடை விதித்துள்ளார்.

முன்னதாக, கூட்டரசு அமைப்புகள் அண்மையில் பணி நியமனம் செய்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பதவி நீக்கம் செய்யுமாறு டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

இது குறித்த வழக்கு விசாரணையில், சான் ஃபிரான்சிஸ்கோ மாவட்ட நீதிபதி வில்லியம் அல்சப், தற்காலிக ஊழியர்கள் உட்பட, கூட்டரசு அமைப்பு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமெரிக்க அரசாங்க மனிதவளத் துறைக்கு அதிகாரமில்லை என்று கூறினார். தமது இந்த உத்தரவு ஓராண்டு அனுபவம்கூட இல்லாத ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அந்த நீதிபதி கூறினார்.

குடியரசுக் கட்சி அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் அரசாங்க செயல்பாட்டை ஒழுங்குபடுத்த நியமிக்கப்பட்ட பெரும் செல்வந்தரான இலோன் மஸ்க் என்பவரும் நிர்வாகத்தில் அரசின் பங்கைக் குறைக்கும் விதமாக ஊழியர் பணி நீக்கத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் தொடர்பில், நீதிபதி அல்சப் ஜனவரி மாதம் 20ஆம் தேதி கூட்டரசு அமைப்புகளின் மனிதவளத் துறை பிறப்பித்த சுற்றறிக்கை, பிப்ரவரி 14ஆம் தேதி அனுப்பிய மின்மடல் ஆகியவற்றை ரத்து செய்து உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்