சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) சரக்கு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து நைரோபியிலுள்ள ஜோமோ கென்யாட்டா அனைத்துலக விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2.32 மணிக்கு வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், சரக்கு விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறினால் புறப்படத் தவறியதால் விமான நிலையத்தின் ஒரே ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டதாக கென்யா விமான நிலைய ஆணையம் கூறியது.
SQ7343 போயிங் 747-412F சரக்கு விமானம் ஜோமோ கென்யாட்டா விமான நிலையத்தில் நேற்று மதியம் 12.39 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி) ஓடுபாதையில் செல்லத் தொடங்கியது. அதிகபட்ச தரை வேகம் 151 நாட்ஸ் அல்லது மணிக்கு 280 கிமீ வேகத்தை எட்டிய விமானம் பிறகு மெல்ல நின்றதாக ஃப்ளைட்ராடார்24 என்ற விமானக் கண்காணிப்பு இணையத் தளத் தகவல் தெரிவித்தது. விமானம் நைரோபியில் இருந்து ஆம்ஸ்டர்டாமுக்கு நேற்று காலை 6.30 மணிக்கு செல்ல இருந்தது.
ஓடுபாதையில் விமானம் அப்படியே நிற்பதை இந்த இணையத்தளப் படங்கள் காட்டுகின்றன.
அனைத்துப் பயணிகளும் தங்கள் விமானப் பயணங்கள் குறித்த கூடுதல் தகவலுக்கு அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கென்யா விமான நிலையங்கள் ஆணையம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.