வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் வெளியுறவு விவகார ஆணையத்தின் தலைவராக மீண்டும் நியமனம்

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் வெளியுறவு விவகார ஆணையத்தின் தலைவராக மீண்டும் நியமனம்

1 mins read
a9ea723b-a6c8-4833-898a-47cbd9fbecbd
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், பியோங்யாங்கின் நீண்டகால இலக்கான தென்கொரியாவுடன் அமைதியான முறையில் மீண்டும் இணைவது என்ற கொள்கையை அண்மைய ஆண்டுகளில் கைவிட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்

பியோங்யாங்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் வெளியுறவு விவகார ஆணையத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகமான கேசிஎன்ஏ திங்கட்கிழமை (மார்ச் 23) தெரிவித்துள்ளது.

உச்ச மக்கள் பேரவையின் (நாடாளுமன்றத்துக்கு ஈடான அமைப்பு) முதல் கூட்டம் நடைபெற்றதற்கு மறுநாள் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

அக்கூட்டத் தொடரில், நாட்டின் அரசியலமைப்பில் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்படும்.

அதன் ஓர் அங்கமாக வெளியுறவு விவகார ஆணையத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றதாகவும் அதில் கிம் ஜோங் உன் வெற்றி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிற முக்கிய அரசாங்க அமைப்புகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இந்தக் கூட்டம், பொதுவாக ஆளும் தொழிலாளர் கட்சி மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளைச் சட்டமாக மாற்றுவதற்கான ஒப்புதலை வழங்கக் கூட்டப்படுகிறது.

மேலும், கடந்த பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட அந்நாட்டின் ஐந்தாண்டுப் பொருளியல் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் 2026ஆம் ஆண்டிற்கான அரசு வரவுசெலவுத் திட்டம் குறித்தும் அக்கூட்டத்தில் மறுஆய்வு செய்யப்படும் என கேசிஎன்ஏ குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்