கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவரைத் தாமே நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்போவதாக மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் அறிவித்துள்ளார்.
ஆணையத்தின் தலைமைப் பதவி மிகவும் முக்கியமானது என்பதால், அந்த விவகாரத்தை எவரும் அரசியலாக்க வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.
தற்போதைய ஆணையத் தலைவர் ஆசாம் பாக்கியின் பதவிக்காலம் வரும் மே 12ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மன்னரின் அறிவிப்பு அமைந்துள்ளது.
“வரும் காலங்களில் ஆணையத்தை வழிநடத்த தகுதியானவரை நானே தீர்மானிப்பேன்,” என்று அவர் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல், முறைகேடு, முறையற்ற அதிகாரப் பயன்பாடு முதலியவற்றுக்கு எதிராக அந்த அமைப்பு சுதந்திரமாகச் செயல்படுவதை உறுதி செய்வது முக்கியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஆசாம் பாக்கி குறித்த சர்ச்சைகள் அண்மைக்காலமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில் மன்னர் இந்த முடிவை எடுத்துள்ளார். வழக்கமாக, பிரதமரின் ஆலோசனையின் பேரில் மன்னரால் இந்த நியமனம் மேற்கொள்ளப்படும்.

