லங்காவி: தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் டீசல் விலை இருமடங்குக்கும் மேல் கூடியதைத் தொடர்ந்து மலேசியாவின் லங்காவி தீவுக்கு தினமும் இயக்கப்படும் ஃபெரி படகுச் சேவைகளின் எண்ணிக்கை 40 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளன.
உதவி வழங்கப்படாதிருந்தால் லங்காவியில் படகுச் சேவைத் துறை அழிந்துபோகக்கூடும் என்ற அச்சம் தலைதூக்கியுள்ளது. புதன்கிழமை (மார்ச் 25) முதல் லங்காவிக்கு தினமும் விடப்படும் படகுச் சேவைகள் ஐந்திலிருந்து மூன்றாகக் குறைக்கப்பட்டுள்ளன.
டீசல் விலை லிட்டருக்கு 3.20 ரிங்கிட்டிலிருந்து (1 வெள்ளி) 7.30 ரிங்கிட்டுக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கையை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக லங்காவி ஃபெரி லைன் வெஞ்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது. விலை உயர்வால் செயல்பாட்டுச் செலவுகள் அதிக அளவில் கூடியது அதற்குக் காரணம்.
பல துறைகளில் பெட்ரோல் நிலையங்களில் டீசல் வாங்க அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் டீசலை வாங்க விண்ணப்பிக்கவேண்டும்.
லங்காவி ஃபெரி லைன் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் பொது நிர்வாகி பஹாரின் பஹாரோம், “பயணச் சேவைகளைக் குறைப்பது என்பது விருப்பப்பட்டு எடுக்கும் நடவடிக்கை அல்ல, நாங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கு அவசியமானது,” என்று குறிப்பிட்டார்.

