இந்தோனீசியாவின் சுமத்ரா தீவுக்கு கிழக்கே படகு ஒன்று கடலில் மூழ்கியதில் குறைந்தபட்சம் 11 பேர் மாண்டுவிட்டனர்.
ஒருவரைக் காணவில்லை என்று அந்த நாட்டின் தேசிய தேடி மீட்பு அமைப்பு ‘பசார்னாஸ்’ நேற்று தெரிவித்தது.
மீட்புப் பணியாளர்கள் 62 பேரை உயிரோடு மீட்டனர். அந்தச் சம்பவத்தில் மாண்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாதர்களும் சிறார்களும் ஆவர்.
மேற்கு ரியாவ் மாநிலத்தின் கடலோரப் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் நேரத்தில் படகு மூழ்கிவிட்டது என்று பசார்னாஸ் அமைப்பின் பேச்சாளரான குக்கூ விடோடோ கூறினார்.
அந்தப் படகில் 74 பேர் இருந்தனர். 62 பேர் உயிர்பிழைத்துவிட்டனர். 11 பேர் மாண்டுவிட்டனர். ஒருவரைக் காணவில்லை. அவர் இன்னமும் தேடப்பட்டு வருகிறார் என அந்தப் பேச்சாளர் கூறினார்.
அந்த வேகப் படகு பிந்தான் தீவில் இருக்கும் தஞ்சோங் பினாங்கு நகருக்குச் சென்று கொண்டிருந்தது.
வழியில் தெம்பிலகான் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் படகு விபத்துக்குள்ளாகிவிட்டது.
கரையில் இருந்து 198 கி.மீ. தொலைவில் விபத்து நிகழ்ந்தது.
விபத்துக்கான காரணங்கள் இன்னமும் தெரியவில்லை என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார். புலன்விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.