மலேசியாவின் பேராக் மாநிலத்தில் சீன ரப்பர் வணிகர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக அங்குள்ள ஒரு தமிழ்ப் பள்ளிக்கு ஆதரவளித்து வந்துள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, யெக் டோங் பிங் 330,000 ரிங்கிட்டுக்கு (S$94,000) பேராக்கின் ஆயர் தாவார் பகுதியில் ஒரு விவசாய நிலத்தை வாங்கினார். அப்போது ‘எஸ்ஜேகேடி ஆயர் தாவார்’ எனும் தமிழ் தொடக்கப்பள்ளி ஏற்கனவே அந்த நிலப்பகுதியில் செயல்பட்டது. அது 1938ல் அமைக்கப்பட்டது.
அரை ஏக்கர் நிலத்தில் இயங்கிய அப்பள்ளி நிர்வாகத்தை யெக் வெளியேறச் சொல்லவில்லை.
மாறாக, பள்ளி வாடகையைத் தள்ளுபடி செய்தது மட்டுமின்றி, அதற்கான அரசு வரியையும் யெக் செலுத்தினார் என்று மலேசிய சீன நாளிதழான சின்சியூ தெரிவித்தது.
அப்பள்ளிக்கான 78 வயது யெக்கின் உதவி அதோடு நின்றுவிடவில்லை.
பள்ளி விரிவாக்க, வகுப்பறை சீரமைப்புப் பணிகளுக்காக நிலத்தை வாங்க, கடந்த ஆண்டு அப்பள்ளி பிரதிநிதிகள் யெக்கை அணுகினர்.
ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு 200,000 ரிங்கிட் இருந்தபோதிலும், மூன்று ஏக்கர் நிலத்தை 400,000 ரிங்கிட்டுக்கு விற்க யெக் ஒப்புக்கொண்டார்.
பள்ளி நிர்வாகத்திடம் போதுமான நிதி இல்லை. ஆனால், நிதி திரட்டி அரசு ஒதுக்கீட்டையும் கேட்போம் என்றார் யெக்.
“பள்ளிக்கு நிதி கிடைத்ததால், 50,000 ரிங்கிட் நன்கொடை அளிக்க விருப்பம் தெரிவித்தேன். அதனால் நிலத்தின் விலை 350,000 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டது,” என்று சின்சியூவிடம் யெக் கூறினார்.
350,000 ரிங்கிட்டையும் திரட்ட முடியாததால், ஓராண்டு கழித்து பள்ளிப் பிரதிநிதிகள் மீண்டும் யெக்கை அணுகினர்.
மேலும் 50,000 ரிங்கிட் நன்கொடை அளிக்க யெக் இணக்க தெரிவித்ததைத் தொடர்ந்து, நிலத்தின் விலை 300,000 ரிங்கிட்டாக குறைத்தது.
பள்ளியின் துணைத் தலைமையாசிரியர்கள் இருவரும், யெக்கின் பெருந்தன்மை மற்றும் கருணையை வெகுவாகப் பாராட்டினர்.
கடந்த 30 ஆண்டுகளில் வாடகை வசூலிக்காத யெக், பள்ளிக்கான அரசு வரியையும் செலுத்தி வந்துள்ளார்.
சீன புத்தாண்டின்போது பள்ளிக்கு மாண்டரின் ஆரஞ்சுப் பழங்களை வழங்குவதோடு, பள்ளி நிகழ்ச்சிகளுக்கும் யெக் நிதி வழங்குகிறார்.
“நான் பணக்காரன் அல்ல, ஆனால் நில வரியை என்னால் இன்னும் செலுத்த முடியும்,” என்று சின்சியூ நாளிதழிடம் யெக் கூறினார்.
“இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவாக இருந்து வந்துள்ள இந்திய ரப்பர் தொழிலாளர்களுக்குக் கைமாறாக நான் திரும்பக் கொடுப்பதற்கு இது ஒரு வழி, என்றார் யெக்.
அப்பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் இந்திய ரப்பர் தொழிலாளர்களின் பிள்ளைகள் என்பதை சின்சியூ நாளிதழ் சுட்டியது.