ஒசாகா: ஜப்பானின் ஒசாகா நகரில் இவ்வாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் நடந்த உலகக் கண்காட்சியில் மனிதர்கள் குளிக்க உதவும் இயந்திரம் காட்சிப்படுத்தப்பட்டது.
அதன் தயாரிப்பாளர்கள் அடுத்த 2026 முதல் அது விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.
முதியோர் உள்ளிட்ட பராமரிப்பு தேவைப்படுவோருக்குப் பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த இயந்திரக் குளியல் தொட்டி, ஒருவரின் உடலைச் சுத்தம் செய்வதோடு மேனியில் ஈரமின்றி தண்ணீரை வெளியேற்றவும் உதவுகிறது.
பராமரிப்பு நிலையங்களுக்கு 2026 மார்ச் மாதம் அந்த மனிதக் குளியல் இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்படும் என்று அதனை மேம்படுத்தி தயாரித்துள்ள ‘சைன்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கான விற்பனை 2026 இறுதியில் தொடங்கும் என்று ஒசாகா நகரில் இயங்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் யாசுகி எயோயமா கூறினார்.
சொந்தமாகக் குளிக்க இயலாதோருக்கும் அவ்வாறு சிரமப்படுவோரைப் பராமரிப்போருக்கும் இந்தக் குளியல் இயந்திரம் தலை முதல் பாதம் வரை சுத்தம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதன் விலை 1.45 மில்லியன் யென் (S$11,887). ஜப்பானில் நடந்த கண்காட்சியில் சுமார் 1,500 வருகையாளர்கள் குளியல் இயந்திரத்தைச் சோதித்துப் பார்த்துள்ளனர் என்று சைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

