கெய்ரோ: மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்தாலும் மனிதநேய நெருக்கடியை எதிர்கொள்ளும் காஸாவுக்குக் கைகொடுப்பதற்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என்று மலேசியா கூறியுள்ளது.
அதை முன்னிட்டு 30 கொள்கலன்களில் உதவிப்பொருள்களைக் காஸாவுக்கு அனுப்பும் தீர்மானத்தில் மலேசியா உறுதியுடன் இருப்பதாக சுமுட் நுசாந்திரா தளபத்திய நிலையத்தின் தலைமை இயக்குநர் சானி அராபி அலிம் அராபி கூறினார்.
அனைத்துலகப் பொருளியலின் நிச்சயமற்றச் சூழல், நாணய நிலவரத்தின் நிச்சயமற்றச் சூழல், ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி ஆகியவற்றை சுட்டிய திரு சானி, கொள்முதல் செலவுகள் கணிசமாகக் கூடியிருப்பதாகச் சொன்னார்.
“உலக அளவில் அதிகரிக்கும் செலவினங்கள் காஸாவுக்கு உதவிசெய்யும் அரசாங்கம் சார்பற்ற அமைப்புகளை நேரடியாகப் பாதிக்கும். பெரும்பாலான பொருள்கள் மலேசிய ரிங்கிட்டில் அல்ல, அமெரிக்க டாலரில்தான் வாங்கப்படுகின்றன,” என்றார் அவர்.
இருப்பினும், காஸாவுக்கான உதவிப்பொருள்களை அனுப்பிவைப்பதில் மலேசியா பின்வாங்குவதாக இல்லை என்று திரு சானி குறிப்பிட்டார்.
மலேசியா, 374 டன் எடையுள்ள முக்கியப் பொருள்களைக் காஸாவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. அதன்மூலம் 100,000 பேர் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

