கோலாலம்பூர்: சீனாவுக்குக் கடந்த ஏழாண்டுகளாக டுரியான்களை ஏற்றுமதி செய்து 6 பில்லியன் ரிங்கிட் (S$1.84 பில்லியன்) ஈட்டியுள்ளது மலேசியா.
இனி தைவானுக்கும் பெருவுக்கும் டுரியான்களை ஏற்றுமதி செய்ய மலேசியா இலக்கு கொண்டுள்ளது.
2018ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சீனாவுக்கு 115,359 டன் அல்லது 6.37 பில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள டுரியான் ஏற்றுமதி செய்யப்பட்டதாக மலேசியாவின் விவசாய, உணவுப் பாதுகாப்பு அமைச்சு கூறியது.
சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டுரியான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 7) அமைச்சு தெரிவித்தது.
2018ஆம் ஆண்டில் 3,555 டன் டுரியான் சுளைகளையும் பசைகளையும் சீனாவுக்கு மலேசியா ஏற்றுமதி செய்தது. அவற்றின் மதிப்பு 202 மில்லியன் ரிங்கிட்.
2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து உறைய வைக்கப்பட்ட டுரியான்களை ஏற்றுமதி செய்ய மலேசியா தொடங்கியது. அப்போது 3,177 டன் உறைய வைக்கப்பட்ட டுரியான்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு 143 மில்லியன் ரிங்கிட்.