கோலாலம்பூர்: மூத்தோர் செயல் திட்டத்தை அக்டோபர் 5ஆம் தேதியன்று அறிமுகப்படுத்த மலேசியா தயாராகி வருகிறது.
மலேசியாவில் உள்ள மூத்தோரின் உரிமைகள், கௌரவம், நலன் ஆகியவற்றைப் பாதுகாக்கும் இலக்குடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மூப்படைதல் தொடர்பான விவகாரங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் மூத்தோரின் பிள்ளைகளுக்கு இருக்கும் பொறுப்புகள் பற்றியும் தெரிவிக்கப்படும் என்றும் சனிக்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற மூப்படைதல் குறித்த மாநாட்டில் நல்வாழ்வுத்துறை தெரிவித்தது.
முப்படைதல் தொடர்பான தேசிய அளவிலான திட்டம் ஒன்றை மலேசியப் பொருளியல் அமைச்சு தயார் செய்து வருவதாகவும் அது கூறியது.
இதற்கு பல்வேறு அமைச்சுகளுடன் பங்குதாரர்களும் ஆதரவு வழங்குகின்றனர்.
மூத்தோர் பலர் குடும்ப வன்முறையால் பாதிப்படைவதாகத் தெரிவிக்கப்பட்டது.
குடும்பத்தினரால் கைவிடப்படுவது, நிதி தொடர்பான துன்புறுத்தல் போன்றவை அவற்றில் அடங்கும்.
எவரிடமும் எதுவும் சொல்ல முடியாமல் மூத்தோர் பலர் அவதியுறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இப்பிரச்சினையை எதிர்கொள்ள இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்துக்குத் தீர்வுகாண சட்டக் கட்டமைப்பு போதாது என்றும் விழிப்புணர்வு, இரக்க குணம், மரியாதை கொடுப்பது ஆகிவற்றின் மூலம் மூத்தோர் பாதுகாக்கப்படுவர் என்று நல்வாழ்வுத்துறை கூறியது.
சுகாதாரப் பராமரிப்பு, வீடமைப்பு, பாகுபாடற்ற பாதுகாப்பு ஆகியவை மூத்தோருக்கு எளிதாகக் கிடைக்க வேண்டும் என்று அது கூறியது.
மூப்படைதலைப் பாரமாகப் பார்க்க வேண்டாம் என்று அத்தகையோரை வாழ்வில் வெற்றி பெற்றவர்களாகக் கருத வேண்டும் என்று நல்வாழ்வுத்துறை கேட்டுக்கொண்டது.