எல்லைகடந்து பணிபுரிவோருக்குப் புதிய பாதுகாப்புத் திட்டம்: மலேசியா

எல்லைகடந்து பணிபுரிவோருக்குப் புதிய பாதுகாப்புத் திட்டம்: மலேசியா

2 mins read
ஏறத்தாழ 480,000 ஊழியர்களுக்கு திட்டம் பலன் அளிக்கும்: அமைச்சர் ரமணன்
f5e9e1c1-c8ac-42fa-b7d5-ff42485e3db3
ஜோகூர் பாருவில் நடந்த வாழ்க்கைத்தொழில் பாதுகாப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ரமணன் (நடுவில்). - படம்: த ஸ்டார்

ஜோகூர்பாரு: சமூகப் பாதுகாப்பு அமைப்பு (பெர்கெசோ) சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசிய ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தவிருக்கும் விரிவாக்கப்பட்ட பாதுகாப்புத் திட்டம், திங்கட்கிழமை (ஜூன் 22) முதல் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) ஜோகூர் பாருவில் உள்ள செத்தியா மாநாட்டு மண்டபத்தில் நடந்த ‘மடானி வாழ்க்கைத்தொழில் பாதுகாப்பு விழா’வில் மனிதவள அமைச்சர் ஆர்.ரமணன் கலந்துகொண்டு இதன் விவரங்களை வெளியிட்டார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இது சார்ந்த விவாதங்கள் ஒரு மாதம் வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சுய தொழில் செய்வோருக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள் எல்லை கடந்து அன்றாடம் சிங்கப்பூருக்குள் சென்று திரும்பும் ஏறத்தாழ 480,000 ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் என்று அவர் கூறினார்.

அதோடு, ஜோகூரில் வேலையில்லாதோர் விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது என்ற அவர், இவ்வாண்டின் முதல் காலாண்டில் அது 2.4 விழுக்காடு இருந்தது என்று விவரித்தார்.

தேசிய வேலையில்லாதோர் விகிதமான 2.9 விழுக்காட்டுடன் அதனை ஒப்பிடுகையில் அது புலனாகும் என்றார் திரு ரமணன்.

மக்களுக்கு வேலை வாய்ப்புகளை விரிவாக்கும் அரசாங்க முயற்சிகளின் தாக்கத்தையும் மாநிலத்தின் வலுவான வேலைச் சந்தையையும் இவை வெளிக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

வேலைகளில் உள்ளோர் விகிதத்தின் வளர்ச்சி

வேலைகளில் ஈடுபடுவோரின் விகிதம் தேசிய அளவான 70.9 விழுக்காட்டையும் கடந்து ஜோகூர் மாநிலத்தில் 71.6 விழுக்காடு வளர்ச்சியடைந்ததாகப் பதிவானதை அவர் சுட்டிக்காட்டினார்.

அண்டை நாடான தாய்லாந்திலும் சிறிய அளவில் மலேசியர்கள் பணிபுரிந்தாலும் வலுவான சிங்கப்பூர் நாணய மதிப்பின் காரணமாக அதிக அளவில் மலேசியர்கள் இங்கு வேலை செய்ய வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்