லங்காவி: லங்காவியின் சுற்றுலாத் துறையை மீண்டும் புதுப்பிக்கும் நோக்கில், அத்தீவுக்கு வரிவிலக்கு (Duty-free) தகுதியை மீண்டும் வழங்குவது குறித்து மலேசிய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
இந்தத் திட்டத்தை ஆய்வு செய்யுமாறு பிரதமர் அன்வார் இப்ராகிம் நிதி அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக லங்காவியில் புகையிலை உள்ளிட்ட சில பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டதால், அதன் சுற்றுலாப் பயணிகள் ஈர்ப்பு குறைந்ததாகக் கருதப்படுகிறது.
“விலையுயர்ந்த சொகுசு கார்கள் உள்ளிட்ட பொருள்களை வரிவிலக்குப் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், அதிக செலவு செய்யும் சுற்றுலாப் பயணிகளை லங்காவிக்கு ஈர்க்க முடியும்,” என்று இது குறித்து கெடா முதல்வர் முகமது சனுசி கூறினார்.
கடந்த 1987ல் வரிவிலக்குத் தீவாக அறிவிக்கப்பட்ட லங்காவி, தற்போது அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகள், பயணிகளின் வருகை குறைவு போன்ற சவால்களை எதிர்கொண்டுள்ளது. புதிய நடவடிக்கை லங்காவியை மீண்டும் சிறந்த வணிக மையமாகவும் சுற்றுலாத் தலமாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

