கெபெங், மலேசியா: மலேசியாவின் கிழக்குப் பகுதியில் இயங்கும் ஆஸ்திரேலியாவின் லைனாஸ் சுரங்க நிறுவனம் உலகுக்கு இன்றியமையாத அரிய கனிம வளங்களை அதிக அளவில் வழங்க இருக்கிறது.
அதன்வழி சீனா ஆதிக்கம் செலுத்தும் கனிம வளத்துறையில் மலேசியாவும் அதன் பங்கை ஆற்ற முயல்கிறது.
கைப்பேசி, மின்வாகனம், காற்று விசையாழி போன்றவை உட்பட அதிவேகமாக வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல சாதனங்களைத் தயாரிக்க அரிய கனிமவளங்கள் மிகவும் அத்தியாவசியமானவை.
அனைத்துலக ரீதியில், கனிமவளங்களை சீனா கட்டுப்படுத்திவரும் வேளையில் அதன் ஆதிக்கத்தைச் சமாளிக்க ஆஸ்திரேலியாவின் பெரும் சுரங்க நிறுவனமான லைனாஸ் நடவடிக்கைகளை விரிவாக்கியுள்ளது. அதன்வழியாக தற்போது சந்தையில் பெற்றுள்ள ஏறத்தாழ 10 விழுக்காட்டு வர்த்தகத்தை அது பெருக்கிவிடலாம் என எதிர்பார்க்கிறது.
சீனா, மீதம் உள்ள 90 விழுக்காடு அரிய கனிம வள வர்த்தகத்தைக் கையாள்கிறது. எனவே, சீனா உலக விநியோகத் தொடரை எந்நேரமும் தட்டுப்பாடுகள் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
“தொழில்துறை முறையில் சீனா, அரிய கனிம வள வர்த்தகத்தில் அதன் வெற்றியைத் தெளிவான திட்டத்தை செயல்படுத்தியதன்வழி அடைந்துள்ளது. நாமும் அதனை கவனத்தில்கொள்ளவேண்டும்,” என்று லைனாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அமன்டா லகாசெ ஏஎப்பி ஊடகத்திடம் தெரிவித்தார்.
சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்திட ஒழுக்கம், கவனம், தெளிவான திட்டமிடல் ஆகிய கடப்பாடுகளை நிறுவனங்கள் கருத்தில்கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் குவாந்தான் நகரின் கடலோரத்தில் உள்ள கெபோங் தொழில்துறை மையத்தில் உள்ள வேதி ஆலையை அண்மையில் பார்வையிடும்போது திருவாட்டி லகாசெ கருத்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஒரே இடத்தில் செயல்படும் உலகின் ஆகப் பெரிய அரிய கனிம வளத் தொழிற்சாலை கெபோங்கில்தான் இயங்குகிறது.

