கோலாலம்பூர்: மலேசியாவில் அடிதடி சண்டை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 16) தீர்ப்பு விதிக்கப்படவிருந்தது.
இருப்பினும் இன்னும் சில நாள்களில் தீபாவளி கொண்டாடப்படவுள்ளது.
இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தனது குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாட விரும்புவதாகவும் அதனால் தீர்ப்பை ஒத்திவைக்குமாறும் மலேசிய நீதிமன்றத்தில் அனுமதி கோரினார்.
நிலைமையைப் புரிந்துகொண்ட நீதிபதி, தீர்ப்பை நவம்பர் 13ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.
41 வயதான கோகுலன் முடி திருத்தும் வேலையில் உள்ளார். அவர் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓர் ஆடவரை வெட்டுக் கத்தியால் கடுமையாகத் தாக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து கோகுலன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில், கோகுலன் மீதான வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை (அக்டோபர் 16) வெளியிடவிருந்தது. தீர்ப்பு எப்படி வரும் என்று அறியாத கோகுலனின் தரப்பு, தீர்ப்பை ஒத்திவைக்குமாறு நீதிபதியைக் கேட்டுக்கொண்டது. இதையடுத்து நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கோகுலனுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.