நேப்பாளப் பெரு வெள்ளத்தில் மாயமான மலேசியர்கள்

நேப்பாளப் பெரு வெள்ளத்தில் மாயமான மலேசியர்கள்

2 mins read
e01530d9-cdb5-4aea-bf57-657b54348cb5
வெள்ளத்தில் உயிர் பிழைத்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும் மீட்பு பணியாளர்கள். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

காத்மண்டு: நேப்பாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்படுத்திய திடீர் பெரு வெள்ளத்தால் கிராமங்கள் உருக்குலைந்து, இதுவரை குறைந்தது 160 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்தச் சம்பவத்தில் மலேசியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேப்பாள-சீன எல்லைக்கு அருகில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தில் இருந்ததாக நம்பப்படும் 11 மலேசியர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக நேப்பாளத் தலைநகர் காத்மண்டுவில் உள்ள தூதரகம் மூலம் தகவல்கள் கிடைத்துள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல்போனதாகப் பதிவு செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரில் 17 மலேசியர்களும் அடங்குவர் என நேப்பாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பனி மூடிய மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து பள்ளத்தாக்கில் சீறிப்பாய்ந்த வெள்ளப்பெருக்கு, வீடுகள், வாகனங்கள் மற்றும் கட்டடங்களை அடித்துச் சென்றது. பெருக்கெடுத்து ஓடும் ஆற்று வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின்சாரம் மற்றும் தொடர்பியல் உள்கட்டமைப்பு வசதிகள் பேரளவில் சேதமடைந்துள்ளன. இதன் காரணத்தினாலேயே அங்குள்ள மலேசியர்களுடனான தொடர்பு தடைபட்டுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு விளக்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட மலேசியர்களைக் கண்டறிந்து அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், உள்ளூர் அதிகாரிகளுடனும் நேப்பாள அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ள தேடல், மீட்பு நடவடிக்கைக் குழுக்களுடனும் மலேசியத் தூதரகம் தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

நேப்பாளத்தில் வாழும் அல்லது அங்குப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ளவர்கள், மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் தங்களது பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவசரகால உதவி மற்றும் முறையான தகவல்களைத் உடனுக்குடன் பெற, மலேசியர்கள் இ-கொன்சுலர் இணைய வாசல் (https://ekonsular.kln.gov.my) வழியாகத் தங்களது தொடர்பு விவரங்களைப் பதிவு செய்து புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உடனடி தூதரக உதவி அல்லது அவசரநிலைகளுக்கு, மலேசியக் குடிமக்கள் தூதரகத்தின் அவசர உதவித் தொலைபேசி எண் (+977-980-100-8000) அல்லது மின்னஞ்சல் (mwkathmandu@kln.gov.my) மூலமாக நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.

காணாமல்போன தனிநபர்கள் குறித்த சரிபார்க்கப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றதும், நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து அடுத்தடுத்த விவரங்களை வழங்கவுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. பயண முகவர்கள், வழிகாட்டிகள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு முகமைகளுடன் இணைந்து தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, சுற்றுப்பயணிகள் ஆறுகள், ஆற்றங்கரைகள், பாலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறு நேப்பாளப் பயணத்துறைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நிலவரம் தெளிவாகும் வரை சுற்றுப்பயணிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் நினைவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்