வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஜப்பானுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியிருப்பதாகக் கூறியுள்ளார். அதன்படி அமெரிக்காவுக்குள் நுழையும் ஜப்பானியப் பொருள்களுக்கு 15 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்றார் அவர். இதற்கு முன்னர் 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் பதிவிட்ட திரு டிரம்ப், அமெரிக்காவில் ஜப்பான் US$550 பில்லியன் பெறுமான முதலீடுகளைச் செய்வதும் உடன்பாட்டில் அடங்கும் என்றார்.
கார்கள், கனரக வாகனங்கள், அரிசி உள்ளிட்ட சில வேளாண் பொருள்களை அமெரிக்காவில் உற்பத்தி செய்வோருக்கு ஜப்பான் அதன் சந்தையை அணுக அதிக வாய்ப்பளிக்கும் என்று திரு டிரம்ப் சொன்னார்.
இந்நிலையில், ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா புதிய வர்த்தக உடன்பாட்டை வரவேற்றுள்ளார். உலகப் பொருளியலுக்கு அது உறுதுணையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் ஜப்பான் செய்யவிருக்கும் முதலீடு, புதிய வேலைகள் உருவாகவும் தரமான பொருள்களைத் தயாரிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.