ஜெருசலேம்: இஸ்ரேல்- ஹமாஸ் போரை நிறுத்துவதற்கு அண்மை காலமாக நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை என கத்தார் பிப்ரவரி 17ஆம் தேதி அன்று தெரிவித்தது.
காஸாவின் ரஃபா நகரத்திற்குள் நுழைந்து அச்சுறுத்தும் வகையில் தாக்குதல் நடத்த வேண்டாம் என இருதரப்புக்கும் இடையே சமரசப் பேச்சுகளை வழிநடத்தும் கத்தார் விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்தது.
1.4 மில்லியன் பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்துள்ள ரஃபா நகரத்தின்மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தைக் கைவிடுமாறு இஸ்ரேலுக்கு அனைத்துலக வகையில் நெருக்கடி தரப்பட்டாலும், “ரஃபா நகரத்தைத் தாக்காவிட்டால் எங்களுக்கு வெற்றியில்லை” என இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகு கூறினார்.

